வடக்கு சிரியாவில் திட்டமிடப்பட்டுள்ள பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து குர்து போராளிகள் வெளியேறாவிட்டால் அவர்களை ஒழிக்கும் தாக்குதல் தீவிரமாக்கப்படும் என துருக்கிய ஜனாதிபதி ஏர்டோகன் எச்சரித்துள்ளார்.
குர்துகள் வடக்கு சிரியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து பின்வாங்கும் வகையில், ஐந்து நாட்கள் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு கடந்த வியாழக்கிழமை துருக்கி ஒப்புக்கொண்டது.
எனினும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக இரண்டு தரப்பினரும் ஒருவர் மீதொருவர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
குர்து போராளிகளை பயங்கரவாதிகளாக கருதும் துருக்கி, சிரியாவுக்குள்ளேயே பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்குவதற்கு விரும்புகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள துருக்கி ஜனாதிபதி ரிசெப் தாயிப் ஏர்டோகன், போர் நிறுத்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் குர்துகள் குறிப்பிட்ட பகுதியை விட்டு வெளியேறவேண்டும் என கோரியுள்ளார்.
அவ்வாறு செய்யாவிட்டால் நாங்கள் விட்ட இடத்தில் இருந்து தாக்குதலை ஆரம்பிப்போம். பயங்கரவாதிகளின் தலைகளை தொடர்ந்து நசுக்குவோம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.